"ஸ்டெம்செல்' சேமிப்போம்...
வேல்ராஜா .ஆ
நாளுக்குநாள்
புதிய பெயர்களுடன் உலா வரும் நோய்களுக்கு ஏற்றார்போல, மருத்துவத் துறையில்
அவற்றைக் கட்டுப்படுத்த சிகிச்சை முறைகளும், மருந்துகளும்
கண்டுபிடிக்கப்படுகின்றன.
அண்மைக்காலமாக
மருத்துவத் துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படும்
"ஸ்டெம்செல்' சிகிச்சையின் மூலம் பல்வேறு நோய்களுக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையில் மனித உடலில் திசுக்கள் மற்றும்
பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் நிரந்தரமாகச் சீரமைக்கப்படுகின்றன.
எலும்பு
மஜ்ஜை, கருப்பையில் உள்ள கரு, விழி வெண்படலம், ரத்தம், பல், கல்லீரல்
ஆகியவற்றின் திசுக்களில் இருந்து "ஸ்டெம்செல்'கள் உற்பத்தி
செய்யப்படுகின்றன. மனித உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் "ஸ்டெம்செல்'களைச்
செலுத்துவதன் மூலம் அந்த நோய் பாதிப்பில் இருந்தும், அதனால் ஏற்பட்ட
சேதத்தில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்பட்டு வருகிறது.
அறிவியல் தகவல்கள்
மின்மினிகள்
தங்கள் இணையைக் கவர்வதற்காகத்தான் மின்னுகின்றன. ஆண் மின்மினிக்கும், பெண்
மின்மினிக்கும் இந்த வெளிச்சம் உண்டு. பெண் மின்மினிப் பூச்சியின்
வெளிச்சம், ஆண் மின்மினியின் வெளிச்சத்தைவிட குறைந்த நேரம் ஒளிரக் கூடியதாக
இருக்கும். மின்மினியின் வயிற்றுப் பகுதியின் பின்புறத்திலிருந்துதான்
வெளிச்சம் வருகிறது. அதன் உடலிலுள்ள "லூஸிபெரோஸ், லூஸிபெரின்' எனும்
ரசாயனப் பொருட்களின் செயல்பாட்டால்தான் வெளிச்சம் உண்டாகிறது. இந்த
செயல்பாட்டிற்கு நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படும். இது வெளிச்சம் மட்டும்தான்.
சற்றும் வெப்பமாக இருக்காது. மின்மினிகளில் பல இனங்கள் இருக்கின்றன.
ஒளிர்வதற்கும் அணைவதற்கும் இடையிலான இடைவெளி, ஒவ்வொரு இனத்திற்கும்
வேறுபடும். ஒரு மின்மினி தன் இனத்தைச் சேர்ந்ததா இல்லையா என்று இன்னொரு
மின்மினி, இந்த ஒளிர்ந்தணையும் இடைவெளியை வைத்துத்தான் கண்டுபிடிக்கிறது.
சிலந்தி
சிலந்தி
தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை! ஏன் தெரியுமா? சிலந்தி வலையில்
வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள
இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது.
சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான்
நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்ட இழைகளில் பட்டுவிட்டாலும்
ஒட்டிக்கொள்ளாதிருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக
ரோமங்களும் உதவுகின்றன.
கங்காரு
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விலங்கு. இதன் குட்டிகள் முழுமையாக
வளர்ச்சியடைவதற்கு முன்பே பிறந்துவிடுகின்றன. பாக்கி வளர்ச்சியெல்லாம்
கங்காருவின் வயிற்றுப் பையில்தான் நடக்கும். குட்டி, பிறந்த உடனே வயிறு
வழியாக ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். பிரசவ நேரத்தில் கங்காரு, குட்டி
வெளியே வருகிற துளை முதல் வயிற்றின் மேல் பகுதிவரையான பாகத்தை நக்கும்.
இப்படி நக்கி நக்கி தன் உடல் ரோமத்தின் வழியே ஒரு பாதையை ஏற்படுத்தும்.
குட்டி இந்தப் பாதை வழியே ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். அம்மாவின்
பாலைத்தவிர மற்ற உணவை, செரிக்கக்கூடிய திறன் வரும்போதுதான் உட்கொள்ளும்.
இத்திறன் வரும் வரை குட்டி, அம்மாவின் பைக்குள்ளேயேதான் இருக்கும்.
குட்டியின் உடற்பகுதிகளெல்லாம் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகுதான்
கங்காரு, தன் குட்டியை கீழே இறக்கிவிடும். பிறகு எப்போதாவது நரியோ, கழுகோ,
மற்ற விலங்குகளோ பிடிக்க வரும்போது குட்டி ஓடி வந்து தன் தாயின் பைக்குள்
ஏறி ஒளிந்துகொள்ளும்.
மீன்
இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக்
குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற
அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல்
குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள்
சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள்
வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது
நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை
முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள்
விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும்.
எதிரிகளிடமிருந்து
தற்காத்துக் கொள்வதற்காகத்தான் முள்ளம் பன்றிக்கு முட்கள் அமைந்துள்ளன.
எதிரிகள் தாக்க வரும்போது முள்ளம் பன்றி முட்களையெல்லாம்
நிமிர்த்திக்கொண்டு விறைப்புடன் நிற்கும். எதிரிகள் முட்களை சரியாகப்
பார்க்கும்படி முதுகு காட்டிதான் நிற்கும். சில சமயம் முட்களை ஒன்றாக
மெதுவாக அசைக்கும். இதைப் பார்த்தும் எதிரி பயந்தோடவில்லையென்றால்,
பின்புறமாகவே விரைந்து வந்து எதிரியின் உடலில் முட்களைச் செருகும். எவ்வளவு
சக்தியுள்ள பெரிய மிருகமாக இருந்தாலும் முள்ளம் பன்றியின் முள் குத்தினால்
பெரும் சிரமம்தான். முள்ளம் பன்றியால் தாக்கப்பட்ட விலங்கு சில சமயம்
இறந்துவிடுவதும் உண்டு. விருப்பப்படி அசைக்க முடிகிற தளர்வான தசைகளில்தான்
முட்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் தசைகளை தளர்த்தியும்
இறுக்கியும், முட்களைப் படிய வைக்கவோ உதிர்க்கவோ முள்ளம் பன்றிகளால்
முடியும்.
முள்ளம்
பன்றியால் குத்துப்பட்ட மிருகத்தின் உடலில் தைத்த முள்ளின் முனைகள் சிறிய
கொக்கிகளைப்போல நிமிர்ந்து மடங்கி உட்சென்றுகொண்டிருக்கும்.
எதிரிகளிடமிருந்து ஓடியோ, ஒளிந்தோ, தப்பிக்க இயலாதவை முள்ளம் பன்றிகள்.
அதனால்தான் இயற்கை முட்களின் பாதுகாப்பை இவற்றிற்கு வழங்கியுள்ளது.
முட்களற்ற பகுதி முள்ளம் பன்றியின் வயிறுதான். இது உடலில் மிகவும்
மென்மையான பகுதி. எதிரிகள் இந்தப் பகுதியை பற்றிவிட்டால் முள்ளம் பன்றி
வசமாகச் சிக்கிக் கொண்டுவிடும். எதிரிகளைக் கண்டால் சில சமயம் இவை உடலைச்
சுறுட்டிக்கொண்டு பந்துபோலக் கிடக்கும். இந்த நிலையில், முட்களற்ற பகுதி
வெளியே தெரியாது. ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் முள்ளம்
பன்றிகள் வசிக்கின்றன.
தேனீக்கள்
தேனீ
அதன் மூக்காலோ, வாயாலோதான் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது என்று பலரும்
நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது உண்மையில்லை. தேனீயிடமிருந்து வரும்
ரீங்கார ஓசை, அதன் இறகுகளின் மிக விரைவான துடிப்பால்தான் ஏற்படுகிறது.
அப்படி இறகுகள் துடிப்பதன் மூலம்தான் தேனீ பறக்கிறது. அதன் இறகுகள்
நொடிக்கு நானூறு முறை துடிக்கின்றன. அதிவிரைவான இந்த அசைவு காற்றில்
உண்டாக்குகிற அதிர்வு நம் காதை அடையும் போது நாம் அதை ரீங்காரமாக
உணர்கிறோம்.
சமூக வாழ்க்கை
நடத்தும் தேனீக்களின் கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீதான் இருக்கும். அந்தக்
கூட்டில் அதுதான் சர்வாதிகாரி. கூட்டில் இன்னும் இரண்டு வகை தேனீக்களும்
இருக்கும். கூட்டை நிலைக்கச் செய்வதற்காகப் பாடுபடும் பெண் தேனீக்கள் ஒரு
வகை. இவை இனப்பெருக்க திறனற்றவை. இன்னொரு வகை தேனீக்கள், சோம்பேறியான
ஆண் தேனீக்கள்.
ராணித் தேனீ,
மற்ற தேனீக்களைவிட உருவத்தில் பெரியதாக இருக்கும். வேலைக்காரிகளான பெண்
தேனீக்கள்தான் தேனும், மகரந்தப் பொடியும் சேகரிக்கும். மெழுகால் கூடு
கட்டுவது, கூட்டைச் சுத்தப்படுத்துவது, குஞ்சுத் தேனீக்களுக்கும்,
ராணித் தேனீக்கும் உணவு கொடுப்பது முதலான பல வேலைகளையும் பெண்
தேனீக்கள்தான் செய்கின்றன.
வேலைக்காரத்
தேனீக்கள் சேகரித்து வைத்த தேனைக் குடிக்கின்ற வேலையைத்தான் சோம்பேறிகளான
ஆண் தேனீக்கள் செய்யும். ஆண் தேனீக்களின் உடல் அமைப்பும், தேனோ மகரந்தமோ
சேகரிப்பதற்கு ஏற்ற விதத்தில் இருக்காது. இவை எண்ணிக்கையில் குறைவாக
இருக்கும். இவை குறிப்பிட்ட காலங்களில் ராணித் தேனீயுடன் இணை சேர்கின்றன.
தேனீக்களின் சமூக வாழ்க்கை நிலைப்பதற்கு ஆண் தேனீக்கள் மிகவும் அவசியம்.
ராணித் தேனீக்கள் கூட்டின் அதிபதிகள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவை
அத்தனை வேலைக்காரத் தேனீக்களையும் சார்ந்து வாழ்கின்ற "முட்டையிடும்
இயந்திரங்கள்" மட்டுமே.
ராணித்
தேனீக்களின் மூளை, வேலைக்காரத் தேனீக்களின் மூளையைவிட சிறியதாக
இருக்கும். ஆனால், ராணித் தேனீ மட்டும்தான் முட்டையிடும் திறன்
பெற்றிருக்கிறது. கூட்டில் ஒன்றிற்கும் அதிகமான ராணிகள் இருப்பதற்கு,
ஏற்கனவே கூட்டில் இருக்கும் ராணி அனுமதிப்பதில்லை. ராணித்தேனீ
முட்டையிடும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் ராணியாக வேண்டுமா
அல்லது வேலைக்காரர்கள் ஆகவேண்டுமா என்று முடிவு செய்வது வேலைக்காரிகளான
பெண் தேனீக்கள்தான்.
வேலைக்காரத்
தேனீக்கள் குறிப்பிட்ட காலங்களில் சில முட்டைகளை கூட்டின் கீழ் முனையில்
அமைத்திருக்கிற "ராணியறை'களுக்கு மாற்றுகின்றன. ஒவ்வொரு தேன் கூட்டிலும்
மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் ராணியறைகள் இருக்கும். ஆனால் அவை மற்ற
அறைகளைவிட மிகப் பெரிதாக இருக்கும். ராணியறைகளில் பிறக்கின்ற
குஞ்சுகளுக்கு வேலைக்காரத் தேனீக்கள் பிரத்தியேகமான உணவை ஊட்டுகின்றன.
இங்கே வளர்ந்து வருகிற பெண் தேனீக்கள்தான் எதிர்காலத்தில் ராணித்
தேனீக்களாக இருக்கும். ராணித் தேனீக்களின் பிரத்தியேகத் தன்மைகளுக்கு
முக்கியக் காரணம், அவற்றின் உணவு முறையில் உள்ள மாற்றம்தான்.
புதிய
ராணி வெளியே வரும்போது, ஏற்கனவே இருக்கும் ராணி கூட்டமான வேலைக்காரத்
தேனீக்களுடன் இடத்தை விட்டுச் சென்றிருக்கும். அவை வேறொரு இடத்தில் புதிய
கூடமைத்து வாழத் தொடங்குகின்றன. சில சமயம் அறைகளின் மேல் படலத்தைத்
திறந்து வெளிவரும் புதிய ராணிகள் இதுபோன்று வேலைக்காரத் தேனீக்களுடன் இடம்
விட்டுச் செல்கின்றன. ஒன்றிற்கு மேற்பட்ட ராணிகள் ஒரே நேரத்தில் வெளியே
வரும்போது, அவர்களுக்கிடையே மிகக் கடுமையான சண்டை நடக்கும். ஒரு ராணி
மட்டுமே மிஞ்சும்வரை இந்தப் பலப்பரீட்சை தொடரும். புதிதாக வெளியே வந்த
ராணிக்கும், கூட்டில் ஏற்கனவே இருந்துகொண்டிருந்த ராணிக்கும் இடையே
யாராவது ஒருவர் வெற்றி பெறுவதுவரை போட்டி நடக்கிறது. அதனால் ஒரு தேன்
கூட்டில் ஒன்றிற்கும் மேற்பட்ட ராணிகள் இருக்கும் நிலை ஏற்படுவதில்லை.
தேனீக்கள்
தேனீக்கள்
நிறைய தேன் உள்ள பூக்களுடைய ஒரு இடத்தைக் கண்டுபிடித்த பிறகு, திரும்பி
வந்து அந்தச் செய்தியை மற்ற தேனீக்களிடம் தெரிவிக்கின்றன. இத்தகைய
கருத்துப் பரிமாற்றத்திற்காக, அவை குறிப்பிட்ட விதமான நடன முறையைக்
கையாள்கின்றன. ஒன்று, வட்டத்திற்குள் வட்டமாகப் பறப்பது. இந்த நடன
முறைக்கு, தேனுள்ள இடம் கூட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் உள்ளது
என்று அர்த்தம். இந்தச் செய்தியைத் தெரிவிக்கும் நடனத்தை ஆடிக்கொண்டே
அந்தத் தேனீக்கள், தான் சேகரித்த உணவை கூட்டினுள்ளே இருக்கும் மற்ற
தேனீக்களுக்குக் கொடுக்கும். இதன்மூலம், நூறு மீட்டர் தொலைவில் அது
கண்டுபிடித்த உணவின் சுவையையும், மணத்தையும் மற்ற தேனீக்கள்
புரிந்துகொள்ளும். உடனே அனைத்துத் தேனீக்களும் நாற்புறமும் பறந்து அந்த
பூக்களைத் தேடிப் போகும். இந்த "வட்ட நடன'த்திலிருந்து, நூறு மீட்டர்
தொலைவில் பூக்கள் இருக்கின்றன என்று அறிந்துகொள்ளலாமே தவிர, பூக்கள்
இருக்கும் சரியான இடத்தை புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் அவை
குறிப்பிட்ட இலக்கு நோக்கிச் செல்லாமல் நாற்புறமும் பறந்து தேடப் போகின்றன.
தேனுடைய பூக்கள் இருக்கும் இடத்தைச் சரியாகத் தெரிவிக்கும் நடனமுறை
ஒன்றும் தேனீக்களிடம் உண்டு. இந்த முறைக்கு "வேகல்' (waggle) நடனம்
என்று பெயர். முதலில் தேனீ நேர்க் கோடாக பலமாக நடுங்கிச் செல்லும். சற்று
மேலாகச் சென்ற பிறகு ஒரு புறமாகத் திரும்பி கீழே வந்து மீண்டும் முதலாவது
நேர்க்கோடு வழியே மேலே செல்கிறது. பிறகு முதலில் திரும்பியதற்கு
எதிர்த்திசையில் திரும்பி கீழே வந்து மீண்டும் நேர்க்கோட்டில் திரும்பி
மேலே செல்கிறது . நடனமாடும் தேனீ, இந்த நடனத்தின் மூலமாக மற்ற
தேனீக்களுக்கு இரண்டு விஷயங்களைத் துல்லியமாக அறிவிக்கிறது. ஒன்று,
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உணவு கிடைக்கும் இடம், கூட்டிலிருந்து
எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்ற விஷயம். இரண்டு, சூரியனையும்,
கூட்டையும் தொடர்புபடுத்துகிற நேர்க்கோட்டிலிருந்து எத்திசையில் எவ்வளவு
சரிவான கோணத்தில் அந்த இடம் அமைந்திருக்கிறது என்பது.
நடனத்தின்
வேகத்திலிருந்தும், அதே நடனத்தை திரும்பத்திரும்பச் செய்வதிலிருந்தும்
உணவு இருக்கும் இடம் எத்தனை தொலைவில் இருக்கிறது என்று மற்ற
தேனீக்களுக்குத் தெரிந்துவிடும். அது மட்டுமல்ல, போகவேண்டிய இடம்
கூட்டிலிருந்து சூரியனுக்கு நேராக இருக்கிறதா? அல்லது எதிர்திசையில்
இருக்கிறதா? பக்கவாட்டில் இருக்கிறதா என்பதுபோன்ற விவரங்களும் சரியாகப்
புரிந்துவிடும். நடனம் அதிக நேரம் நீடித்தால் உணவு மிக நிறைய இருக்கிறது
என்று அர்த்தம்.
ஆஸ்திரேலியாவைச்
சேர்ந்த கால்வோன்ப்ரிஷ் எனும் உயிரியல் விஞ்ஞானிதான் ஆய்வு செய்து,
தேனீக்களின் இந்த செய்திப் பரிமாற்றத்தைக் கண்டுபிடித்தார்.
தேனீக்களின்,
அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவருகிற லார்வாக்களின் முக்கிய உணவு
தேன்தான். பூவிலுள்ள தேனும், தேன் கூட்டிலுள்ள தேனும் வித்தியாசமானவை.
தேனீ, பூவிலிருந்து தேனெடுத்த பிறகு அந்தத் தேன் நேராக,தேனீயின்
வயிற்றிலுள்ள இரண்டு அறைகளில் முதலாம் அறைக்குச் செல்லும். ஒரு சிறிய
"வால்வி 'ன் செயல்பாட்டினால் இந்தத் தேன் இரண்டாவது அறைக்குக்
கடப்பதில்லை. பூவிலிருந்து சேகரித்த தேனுடன் கூட்டை அடைகிற தேனீ, இந்தத்
தேனை கூட்டில் உள்ள சில பிரத்தியேக தேனீக்களுக்குக் கொடுக்கிறது. அவை
ஒன்றுக் கொன்று இந்தத் தேனை "கை'மாற்றிக் கொள்கின்றன. இந்த
செயல்களுக்கிடையில் அதில் சில நொதிகள் (enzyme) சேரும்.
அதன்பிறகு
இந்தத் தேன், கூட்டின் பிரத்தியேக அறைகளில் பாதுகாக்கப்படுகிறது. சில
பிரத்தியேக தேனீக்கள், அவற்றின் சிறகுகளை விசிறியாகப் பயன்படுத்தி தேனில்
உள்ள நீர்மையின் அளவைக் குறைக்கின்றன. இப்போது தேன் கூட்டில் தேன்
தயாராகிறது. ஒரு சாதாரண தேன் கூட்டில் 45 கிலோகிராம் வரை தேன்
சேகரிக்கலாம். ஒரு கிலோகிராம் தேனுண்டாக்க ஒரு தேனீ ஒரு கோடி
பூக்களிலிருந்து தேன் சேகரிக்கவேண்டும். ஒரு பயணத்தில் ஒரு தேனீ 600
பூக்களைச் சந்திக்கும். பூக்களிலிருந்து மட்டுமல்ல, தேன் உண்கிற சில
உயிரினங்களின் எச்சங்களிலிருந்தும் தேனீ தேன் சேகரிப்பதுண்டு.
தேனீக்களுக்கு தேன்தான் முக்கியமான உணவு. எனவேதான் அவை தேன் சேகரித்து
கூட்டில் பாதுகாக்கின்றன.
பால் தயிராவது எப்படி?
மனிதர்களுக்குத்
தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. அதைவிட அதிகமான பாக்டீரியாக்கள்
நமக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நன்மை
செய்யும் பாக்டீரியாக்கள் இல்லையென்றால், நாம் சாப்பிடும் உணவு செரிக்காது.
நாமெல்லாம் உயிர் வாழவே முடியாது.
இப்படி சம்பளம் வாங்காமல் நமக்குச் சேவை செய்யும் பாக்டீரியாக்கள் எங்கிருந்து வருகின்றன?
நாமே
நிறைய பாக்டீரியாக்களை மறுஉற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். அவற்றில்
ஒன்றுதான் தயிர். உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுடனும், மற்றொரு பொருள்
சேரும்போது வேதிவினை நடக்கிறது. அதேபோல, பாலில் கொஞ்சம் தயிரை ஊற்றி உறை
ஊற்றும் போது பாலில் வேதிவினைதான் நடக்கிறது. (சமைப்பதே ஒரு
வேதியியல்தான்). பொதுவாக, பாலில் புரதச் சத்து அதிகம். இந்தப்
புரதச்சத்துதான் நமது எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. பால்
தயிராகும்போது, இந்தப் புரதச்சத்து கெட்டியாகி உறையும் செயல்பாடுதான்
நடக்கிறது.
ஏற்கனவே
உறைந்த தயிரில் "லாக்டோபேசில்லஸ் அசிடோபில்லஸ்' (Lactobacillus
acidophilus) என்ற பாக்டீரியா இருக்கிறது. காய்ச்சப்பட்ட பாலில் இந்த
உறைந்த தயிரை சிறிதளவு ஊற்றும்போது, பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரைப்
பொருளை இந்தப் பாக்டீரியா நொதிக்கச் செய்கிறது. இதன்மூலம் லாக்டிக் அமிலம்
உருவாக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நேர்மின் ஹைட்ரஜன் அயனியை, பாலின்
புரதப் பொருளில் உள்ள எதிர்மின் துகள்கள் ஈர்க்கின்றன. இதன் காரணமாக புரதப்
பொருள் சமநிலையை அடைவதால், புரத மூலக்கூறுகள் ஒன்றை ஒன்று எதிர்ப்பதை
விட்டுவிட்டு கெட்டியாகி உறைந்துவிடுகின்றன.
லாக்டோ
பேசில்லஸ் பாக்டீரியா செயல்படுவற்கு ஏற்ற வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்.
அதன் காரணமாகத்தான், பால் காய்ச்சப்பட்ட பிறகு தயிர் உறை ஊற்றப்படுகிறது.
ஆறிய பாலையும் சற்று வெப்பப்படுத்தி உறை ஊற்றினால், தயிர் நன்றாக உறையும்.
உடலில்
உணவு செரிக்கவும், நோய்கள் குணமாகவும் லாக்டோ பேசில்லஸ் போன்ற நன்மை
செய்யும் பாக்டீரியாக்கள் தேவை. இதை உணர்ந்து கொண்டுதான் நமது முன்னோர்கள்
தயிர், மோரை அதிகம் சாப்பிடச் சொன்னார்கள். நம் வயிற்றுக்குள் செல்லும்
உணவை செரிக்க வைப்பதற்கான சில நொதிகளை, இந்த நன்மை செய்யும்
பாக்டீரியாக்கள் தருகின்றன.
No comments:
Post a Comment