அன்னையர் அந்தாதி

அன்னையர் அந்தாதி (பகுதி: 1)

அன்னையர் அந்தாதி


காப்பு:
கன்னியர் தேவியர் கடவுட் பாகத்துறை
அன்னையர் அந்தாதி முனைந்திட - முன்னவா
கற்பகப் பிள்ளாயுன் கழலடி தொழுதேன்
நற்றமிட் சொல்லாய் நிறை!
பாயிர அகவல்: கேண்மிர் கேண்மீர் கேளிர் கேண்மீர்
செப்பலைக் கொஞ்சம் செவிமடு கேண்மீர்
முக்கண் தேற்றிய முழுமதி ஈண்டு
அகக்கண் தோற்றிய அருளொளி எழுத்தை
அகத்தில் விளைத்த அணங்கியர் கருத்தை
இடக்கண் உருவகம் இலங்குதிரு மகளாய்
வலக்கண் என்பதும் வளர்கலை மகளாய்
முதற்கண் ஆவதும் மூத்தவள் பொருளாய்
8
சடையோன் தரிக்கும் முப்புறச் சடையாய்
சபையோர் தைக்கும் முப்பொருள் விடையாய்
பசுபதியார் தரும் பரம்பொருள் அறிந்து
பாவையார் இறும் நறும்பொருள் உணர்ந்து
உருப்பொருள் ஆகிய கலைமகள் தமையும்
பருப்பொருள் ஆகிய திருமகள் தனையும்
கருப்பொருள் ஆகிய பெருமகள் உமையும்
திருப்பொருள் ஏகிய கருப்பொருள் ஆக்கி
16
அத்தன் இயம்பும் அருமை உணர்ந்து
சித்தம் பயின்று செழுமை பயின்று
அவனவள் காட்டும் அற்புதப் பொருளை
அரவரவர் தீட்டும் அகப்பொருள் நலனை
அம்மையர் ஆகிய மும்மகள் என்றும்
மும்மகள் ஆகிய அன்னையர் என்றும்
முன்னையர் உள்ளும் முந்தை வினையை
அன்னையர் மெய்மை அந்தாதிப் பாவாய்


24
கலைமகள் ஊட்டிட தமிழ்ப்பால் உண்டு
கருத்தவள் காட்டிட காதற்பால் கொண்டு
அந்தாதி அருளிட கட்டளைப் படிவம்
ஆதிகள் விரியும் கட்டளைப் படியும்
அமையுங் கவிதை அற்புதந் தீட்டி
அணையா மனதுள் நற்பதம் மூட்டி
அடுத்தோர் புதுமையும் அகத்தே இயம்பி
அடுக்கும் முதலிலும் அகவல் விளம்பி



32
வடகலை தென்கலை கீழ்க்கலை மேற்கலை
வாழ்கலை என்றுமே வகைதொகை உணரா
இன்னமுந் தமிழின் இலக்கணந் தெரியா
இதுவரை எதுவுமே நலத்தினைப் புரியா
யாவுமே அறியா இளையோன் என்பால்
மேவிடுங் கலையா மனந்தனை வழங்கி
தன்னை உணர்த்தி தமிழும் உணர்த்தி
என்னில் முழுதுற எண்ணம் ஆகியே
40
அன்னை அந்தாதி ஆக்கிடப் பணிக்க
பிள்ளைத் தமிழால் பேசிடத் துணிந்து
குருவருள் கனிய உளமுற வணங்கி
பரமனின் அடிமலர் பாதம் பணிந்தே
பக்தியில் மலரைப் பிணைந்து தொடுக்க
முத்தமிழ் அன்னை முனைந்து கொடுக்க
உத்தம புத்திரன் உரைப்பதும் ஈங்கே
சத்திய மொழியால் அன்னை அந்தாதி!
48
மறைபொருள் இஃதை மனனம் செய்தே
மனத்தால் உணர்ந்து தியானம் புரிகின்
இறைநலங் கனியும் இனிமை பெருகும்
குறைகள் அகலும் தடைகள் விலகும்!
புரியாப் பொருளும் புலப்படக் கூடும்!
தெரியாத் திறமும் வெளிவரக் கூடும்!
நிறைகள் நிறைத்து வளம்பல சேரும்
இறையின் அருளே! இறைவா அருளே!
56
வையகம் உய்க! வாழ்க்கை உய்க!
தாயகம் உய்க! தமிழும் உய்க!
கேண்மீர் உய்க! கேண்மை உய்க!
அண்டம் எங்கும் அன்பே உய்க!
பசுபதி ஆகினன் பாதம் போற்றி!
பாகம் பிரியாப் பகவதி போற்றி!
தம்முள் விரியும் தமிழே போற்றி!
எம்முள் நிறைகும் மும்மகள்
அம்மையரே போற்றி! போற்றி! போற்றியே!
64
*** பாயிர அகவல் முற்றும் ***
அன்னையர் அந்தாதி
நூல்:
இறை வணக்கம்:
சென்னியுட் செறிந்து சிந்தையுட் சொரியும்
அன்னையர் மும்மகள் அந்தாதி நன்னெறி
விரிவருட் பொருளாய் விளைந்திடப் பணிவாம்
கரிமுகன் பதமலர்த் தாழ்!
என்றும் மும்மகளே துணை!
1. கலைமகள் அந்தாதி:
http://thamilkavithaikal.blogspot.com/2011/05/2.html
2. திருமகள் அந்தாதி (அலைமகள் அந்தாதி):
3. அம்பிகை அந்தாதி (மலைமகள் அந்தாதி) :
* அன்னையர் அந்தாதி முற்றும் *

No comments:

Post a Comment