டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது?

உங்கள் படைப்புக்களையும் உங்கள் கருத்துகளையும் கீழ்க்கண்ட மின்னஞ்சளுக்கு அனுப்பி வைக்கவும் velrajaa@gmail.com ---------------------------------------------------------------

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வில் பாஸ் செய்வதற்கு யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்பது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் பலர் லஞ்சம் வாங்கிக் கொண்டு, வேண்டப் பட்டவர்களை தேர்வில் பாசாக்கி விட்டு, அரசு வேலை பெறுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், லஞ்ச ஒழிப்பு போலீசார், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் செல்லமுத்து உள்பட 13 உறுப்பினர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். 
அந்த சோதனையில் பிடிபட்ட ஆவணங்களை வைத்து, கடந்த நவம்பர் மாதம் தேர்வாணைய அலுவலகம் மற்றும் ஊழியர்கள், அதிகாரிகளின் வீடுகளில் 2-ம் கட்டமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் சிலருடைய வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அவர்கள் குறிப்பிட்ட இடைத்தரகர்கள் மற்றும் சில அதிகாரிகளின் வீடுகளில் 3-ம் கட்டமாக சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த சோதனைகளில் கைப்பற்ற ஆவணங்களை வைத்தும், பலரிடம் நடத்திய விசாரணையை வைத்தும் லஞ்சம் கொடுத்து அரசு வேலைக்கு சேர்ந்ததாக பலரது பெயர்கள் கிடைத்தன. அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பட்டியலிட்டு, அவர்களின் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ரகசியமாக சேர்த்தனர். மேலும் தேர்வு முடிவுக்காக காத்திருந்த சிலரது பெயர், முகவரி விவரங்களையும் போலீசார் சேகரித்தனர்.

பின்னர் அவர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் போலீசார் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களின் வாக்குமூலத்தையும் போலீசார் பெற்றனர்.

தேர்வில் பாஸ் செய்வதற்காக யாருக்காவது பணம் கொடுத்தார்களா? அப்படி கொடுத்திருந்தால் அந்த தொகை எவ்வளவு? லஞ்சம் கொடுக்கவில்லை என்றால், லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவர்கள் யாராவது தெரியுமா? அவர்கள் எங்கே வசிக்கிறார்கள்? என்று கேள்வி மேல் கேள்விகளை கேட்டதாக தெரிகிறது.

இந்த சோதனையிலும் போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதை உறுதி செய்யும் வகையிலும், அதற்கான ஆதாரங்களை கைப்பற்றும் வகையிலும் மேலும் சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வளவு சோதனைகளிலும் எந்த அதிகாரிக்கு எதிராக, யார், யார், எப்படிப்பட்ட வாக்குமூலத்தை அளித்திருக்கிறார் என்ற தகவலை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு எதிராக வாக்குமூலம் பெறப்பட்டிருந்தால், தகுந்த ஆதாரங்களை திரட்டி அவர்களை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment