மேல் நாட்டு ஜோதிடம் – பாடம் 1

மேல் நாட்டு ஜோதிடம் – பாடம் 1 நாம் இதுவரையில் "நீங்களும் ஜோதிடர் ஆகலாம்" என்ற பாடங்களின் வாயிலாக ஜோதிடத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம். நமது பாடங்களைத் தவிர மற்ற புத்தகங்களைப் படித்து இன்னும் அதிகம் தெரிந்து கொண்டவர்களும் உண்டு. எதற்கும் எல்லை என்பதே கிடையாது. நாம்தான் நமது Vedic Astrology-யில் எல்லாம் படித்து விட்டோமே! புதிதாக Western Astrology யில் என்ன சொல்லிக் கொடுத்துவிடப் போகிறீர்கள்? நமது ஜோதிடத்தைக் காட்டிலும் அவர்கள் ஜோதிடம் உயர்ந்ததா? நமது ஜோதிடத்திலிருந்து வந்ததுதானே அவர்களின் ஜோதிடம்!" என்றெல்லாம் கேள்விகள் கேட்க்கத் தோன்றும். நாம் இதற்கெல்லாம் பதில் சொல்லியே தீர வேண்டும். Zodiac மேல் நாட்டு ஜோதிடம் பாடம் 1சிலர் நினைப்பதுபோல் மேலை நாட்டவர் ஜோதிடம் நமது ஜோதிடத்திலிருந்து சென்றது அல்ல: அதற்கு அடிப்படை நமது ஜோதிடமும் அல்ல; அது அவர்களின் தனித்தன்மையுடையது. இயேசு பிறப்பதற்கு சுமார் 3700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவர்களுக்கு ஜோதிடத்தைப் பற்றிய கருத்துக்கள் இருந்து வந்தன. சேத் என்பவர்தான் உலகத்தின் முதல் ஜோதிடர் என்று அவர்கள் கருதுகின்றனர். அவர்தான் ஆகாய மண்டலத்தில் சூரியனுடைய பாதையையும், அந்தப் பாதையில் பூர்ணச்சந்திரன் ஓர் ஆண்டில் 12 முறை குறுக்கிடுவதையும் கண்டார். இதைவைத்துத்தான் அவர் ஆகாய மண்டலத்தை 12 வீடுகளாகப் பிரித்தார். நாம் அந்த 12 வீடுகளைத்தான் ராசி என்று குறிப்பிடுகிறோம். இதைப்போல் கிரேக்கர்கள், பாபிலோனியர்கள், சீனர்கள் ஆகியோரும் ஜோதிடத்தைப் பற்றி அறிந்து வைத்து இருந்தனர். சீன ஜோதிடம் என்பது ஒரு தனி முறையாகவே இன்றும் இருந்து வருகிறது. அவர்களுக்கும் வருடத்திற்கு 12 மாதங்கள்தான்; ஓவ்வொரு மாதத்திற்கும் ஒரு பிராணியின் பெயர் உண்டு. இவ்வாறாக ஒவ்வொரு தேசத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கென்று ஒரு முறையை வகுத்துப் பின்பற்றி வருகின்றனர். நமது ஜோதிடமானது இந்தப் பூவுலகம் தோன்றிய நாளிலிருந்தே இருந்து வருகிறது. கர்க்க முனிவர் என்பவர்தான் தமது சீடர்களுக்கு ஜோதிடத்தைப் போதித்தார். அதற்குப் பிறகு முக்காலமும் உணர்ந்த நமது முனிவர்களால் அது போற்றப்பட்டு வந்தது. அவர்கள் பல நூல்கள் எழுதி நமக்களித்தார்கள். ஆனால் அந்த நூல்கள் எல்லாம் நமக்கு முழுமையுமாகக் கிடைக்கவில்லை. காலத்தால் அழிந்தவை போய் மீதமுள்ள நூல்கள்தான் நமக்குக் கிடைத்தன. இவ்வாறாக ஒவ்வொரு நாட்டவரும் கிரகங்களையும், நட்சத்திரங்களையும் ஆராய்ந்து தங்களுக்கென்று ஒரு முறையைப் பின்பற்றி வருகின்றனர். ஆகவே ஜோதிடம் என்பது நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. மூட நம்பிக்கையாக இதை நமது நாட்டில் ஒரு சாரார் பின்பற்றி வருகின்றனர்; உலகில் எந்த நாட்டவரும் பின்பற்ற வில்லை என்று யாராவது நினைத்தால் அது மிகத் தவறான எண்ணமாகும். அதை மாற்றிக்கொள்வது நல்லது. இந்த மேல் நாட்டு ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் முதலில் நமது ஜோதிடத்தைப் பற்றி நன்கு தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அது தெரியாமல் இதை மட்டும் படித்தால் இது புரியாது. அதைத் தெரிந்தவர்களை மனதில் வைத்தே இதில் பாடங்கள் எழுதப்படுகின்றன. ஆகவே ஜோதிடத்தின் அடிப்படை தெரியாதவர்கள் முதலில் அடிப்படைகளைத் தெரிந்து கொண்டு இதைப் படியுங்கள். நமது முந்தைய 53 பாடங்களைப் படித்தாலே அடிப்படைகள் எல்லம் நன்றாகத் தெரிந்துவிடும். இப்போது நமது ஜோதிடத்திற்கும் மேலை நாட்டு ஜோதிடத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பார்ப்போம். முதலில் நமது ஜோதிடம் போன ஜென்மத்துப் பாவ, புண்ணியங்களை நம்புகிறது. மறு பிறப்பை நம்புகிறது. This is based on past karma and it believes the theory of incarnation. மேல் நாட்டு ஜோதிடம் மறு பிறப்பையும் நம்புவதில்லை; போன பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களையும் நம்புவதில்லை. நாம் பிறந்த நேரத்திலுள்ள கிரகத்தைவைத்தே நமது வாழ்க்கை அமைகிறது என்று உணர்த்துகிறது. நமது ஜோதிடத்தில் எல்லவற்றிற்கும் பரிகாரம் என்று ஒன்று உண்டு. தெய்வ நம்பிக்கையின் அடிப்படையிலானது. அவர்கள் ஜோதிடத்தில் அப்படி எதுவும் கிடையாது. நமக்கு ராகு, கேதுவைச் சேர்த்து ஒன்பது கிரகங்கள். அவர்களுக்கு ராகு, கேதுக்கள் இல்லாது பத்துக் கிரகங்கள். ஆனால் அதற்குப் பதில் Uranus, Neptune, Pluto என்று மூன்று கிரகங்கள் அதிகப்படியாக உண்டு. நமது ஜாதகத்தில் 12 வீடுகள் உண்டு. இந்த 12 வீடுகளும் "ஸ்ரீ பதிப் பத்ததி" யின் அடிப்படையில் 27 நட்சத்திரங்களை உள்ளடக்கிய வீடுகளாகும். இது ஸ்திரமானது. ஆகவே இது "நிராயனா" என்றழைக்கப் படும். எல்லா வீடுகளுமே சமமாக 30° இருக்கும். அவர்களுக்கு மேஷத்தின் ஆரம்ப இடமான "Vernal Equinox" என்பது பின் நோக்கிச் செல்லக் கூடியது. ஒரு வீடு என்பது பிறந்த ஊருக்குத் தகுந்தாற்போல் அளவில் மாறுபடும். எல்லா வீடுகளுமே சமமாக 30° இருக்க வேண்டும் என்று இல்லை. ஊருக்குத் தகுந்தாற்போல் மாறுபடும். இது "சயனா" என்றழைக்கப்படும். நமது ஜோதிடத்தில் எதிகாலத்தைக் கணிக்க தசை, புக்தி முறையைப் பின்பற்று கின்றோம். அவர்களுக்கு தசை, புக்திகளெல்லாம் கிடையாது. "Progression" "Direction" என்ற முறைகளின்படி எதிர்காலத்தைக் கணிக்கிறார்கள். நாம் நாள் என்பதை ஒரு சூரிய உதயத்திலிருந்து மறு சூரிய உதயமுள்ள காலத்தை ஒரு நாள் என்கிறோம். அவர்களுக்கு நாள் என்பது நள்ளிரவு 12.00 மணியிலிருந்து தொடங்கி அடுத்த நாள் இரவு 12.00 மணிவரையில் உள்ள இடைப்பட்ட காலமேயாகும். நமக்கு நவாம்சம், ஹோரை, திராசாம்சம் போன்ற உப கட்டங்கள் உண்டு. அஷ்டவர்க்கம் என்ற முறையும் நமது ஜோதிடத்தில்தான் உண்டு.அவர்களுக்கு அதெல்லாம் கிடையாது. ராசிக்கட்டம் ஒன்றுதான். நாம் ஒரு கிரகத்தின் பலத்தைக் கணிக்க ஷட்வர்க்கம் என்ற முறையைப் பின்பற்றுகின்றோம். அவர்களுக்கு ஷட்வர்க்கம் எல்லாம் கிடையாது. கிரகங்களின் பார்வையை ( Aspect) வைத்தே முடிவு செய்கின்றனர். நான்காம் இடம் என்பது நமது ஜோதிடத்தில் தாயாரையும், ஒன்பதாம் இடம் தகப்பனாரையும் குறிக்கிறது. அவர்களுக்கு 4-ம் இடம் தகப்பனாரையும், 10-ம் இடம் தாயாரையும் குறிக்கிறது. இவ்வாறாகப் பலவிதத்தில் நமது ஜோதிடத்திற்கும், அவர்கள் ஜோதிடத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நாம் மேலை நாட்டு ஜோதிடத்தின் அடிப்படைகளைத்தான் இங்கு பார்க்கப் போகிறோம். அதற்கு மேல் கற்றுக் கொள்ள விழைவோர் மேலும் புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் இங்கு எழுதுவதென்பது மிகவும் கடினமான காரியம். இதை மனதில் கொண்டு மேலே படியுங்கள். அவர்களுக்கும் 12 ராசிகள் உண்டு. அவைகளெல்லாம் ஆங்கிலப் பெயர்கள். நாமும் அவற்றை ஆங்கிலத்திலேயே எழுதுவோம். அப்போதுதான் எல்லோருக்கும் எளிதாகப் புரியும். தவிர எல்லா ராசிகளுக்கும் Symbol உண்டு. அவற்றை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தவிரவும் இந்த Symbol களையெல்லாம் நீங்கள் மனப்பாடமாகத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்ப் பெயர் ஆங்கிலப் பெயர் Symbol மேஷம் ARIES ♈ ரிஷபம் TAURUS ♉ மிதுனம் GEMINI ♊ கடகம் CANCER ♋ சிம்மம் LEO ♌ கன்னி VIRGO ♍ துலாம் LIBRA ♎ விருச்சிகம் SCORPIO ♏ தனுசு SAGITTARIUS ♐ மகரம் CAPRICON ♑ கும்பம் AQUARIUS ♒ மீனம் PISCES ♓ நாம் மேலே கூறியவற்றை நன்றாகப் படியுங்கள். ஆங்கிலப் பெயர்களும், Symbol களும் நன்றாகத் தெரிய வேண்டும். நாம் எல்லாவற்றிற்கும் Symbol தான் உபயோகிப்போம். ஆகவே அவற்றை எல்லாம் நன்றாகப் படித்து மன்ப்பாடம் செய்து விடுங்கள். பின்பு மறுபடியும் சந்திப்போம்.

No comments:

Post a Comment